காலம் அறிதல்

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்குறள் > அரசியல்

481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.


483. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.


484. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.


485. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.


486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.


488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.


489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.


490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.


"https://ta.wikibooks.org/w/index.php?title=காலம்_அறிதல்&oldid=2792" இலிருந்து மீள்விக்கப்பட்டது