குருவியும் குரங்குகளும்

விக்கிநூல்கள் இலிருந்து

காட்டில் குளிர்காலம். அக்காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் தாள முடியாத குளிரால் தவித்துத் தத்தளிக்கும் போது அவை இருந்த இடத்தில் ஒரு மின்மினிப் பூச்சி வந்து சேர்ந்தது. உடனே குரங்குகள் தாவிச் சென்று அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்தன. அதை ஓர் இடத்தில் விட்டு, அதன் மேல் இலைச் சருகுகளைக் குவித்தன. ஒரு குரங்கு மின்மினிப் பூச்சியை வாயால் ஊதி அதன் உதவியால் இலைச் சருகுகளைப் பற்றவைக்க முயன்றது. ஊதி ஊதி மூச்சுச் திணறியது.
ஒரு குரங்கால் முடியாத போது மற்றொரு குரங்கு மின்மினித் தீயை ஊதிக் கொழுந்து விட்டு எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டது. இவ்விதமே குரங்குகள் எல்லாம் மின்மினித் தீயின் உதவியால் தீ மூட்டிக் குளிர் காயும் பணியில் ஈடுபட்டிருந்தன. இதனைக் கண்ட ஒரு குருவி மின்மினிப் பூச்சியின் ஒளியை நெருப்பு என நினைத்து குரங்குகள் குளிர் காய முயல்வதை உணர்ந்தது. இம்மூடர்களுக்கு உண்மையை விளக்க எண்ணிய குருவி, தான் இருந்த மரத்திலிருந்து கீழே இறங்கி குரங்குகளை அணுகியது.

"நன்பர்களே நீங்கள் ஊதுவது தீப்பொறி அல்ல. மின்மினியின் ஒளி. இந்த ஒளி தீ இல்லாத ஒளி. இதைக் கொண்டு ஒரு பொழுதும் உங்களால் தீ மூட்டவே முடியாது. ஏன் வீண் வேலையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?" என்று எடுத்துக் கூறியது குருவி. மூடக் குரங்குகள் குருவியின் பேச்சைக் கேட்கவே இல்லை. தீ மூட்டும் வேலையை முன்பை விட முனைப்பாகச் செய்தன. புத்தி புகட்ட வ்ந்த குருவியோ இடை விடாமல் "மின்மினி தீ பற்றாது, பாடுபட்டுப் பலன் இல்லை" என்று கூறிக் கொண்டே இருந்தது. இதனால் அம்முரட்டுக் குரங்குகளுக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. அவை துள்ளிக் குதித்துப் பறவையைப் பிடித்து, " இனி அயலார் அலுவலில் தலையிடாதே!" என்று அதன் தலையைத் திருகி எறிந்தன.

மதி கெட்ட மந்திகளுக்குப் புத்தி புகட்ட முயன்றதன் பலனாக அப்பாவிக் குருவி தன் உயிரையே இழக்க நேர்ந்தது!.

"https://ta.wikibooks.org/w/index.php?title=குருவியும்_குரங்குகளும்&oldid=11553" இலிருந்து மீள்விக்கப்பட்டது