திருக்கோத்தும்பி/உரை 61-64

விக்கிநூல்கள் இலிருந்து

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப் படாத களிவந்த வான்கருணை

வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! உள்ளப்படாத - மனத்தினால் நினைக்க இயலாத, திருவுருவை - திருவுருவத்தை. உள்ளுதலும் - நினைத்தலும், கள்ளப்படாத - மறைத்தல் இல்லாத, களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க, வான் - மேலான, கருணை வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான், எம்பிரான் - எம் இறைவன், என்னை - அடியேனை, வேறே - தனியாக, ஆட்கொள் - அடிமைகொண்ட, அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

இறைவன் கரணம் கடந்த பெருமானாதலின், ‘உள்ளப்படாத திருவுரு’ என்றார். ஆனால், பதி ஞானத்தினாலே நினைக்கலாமாதலின், ‘உள்ளுதலும்’ என்றார். ‘தனியாக ஆட்கொண்டான்’ என்றது, ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை’ போன்ற தவ விரதங்கள் இல்லாதிருக்கவும் தம்மை ஆட்கொண்டான் என்பதாம்.

இதனால், இறைவன் தன்னை நினைப்பவர்க்கு வந்து அருள் செய்வான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_61-64&oldid=2365" இலிருந்து மீள்விக்கப்பட்டது