திருக்கோத்தும்பி/உரை 69-72

விக்கிநூல்கள் இலிருந்து

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்

சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்

கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! தோலும் துகிலும் - புலித்தோலும் மெல்லிய ஆடையும், குழையும் சுருள் தோடும் - குண்டலமும் சுருண்ட தோடும், பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் - பால் போன்ற வெண்மையான திருநீறும் புதிய சந்தனத்துடன் பசுமையான கிளியும், சூலமும் தொக்க வளையும் - முத்தலை வேலும் தொகுதியான வளையலும், உடை - உடைய, தொன்மைக் கோலமே - பழமையான வடிவத்தையே, நோக்கி - பார்த்து, குளிர்ந்து ஊதாய் - இனிமையாய் ஊதுவாயாக.

விளக்கம் :

தோல், குழை, நீறு, சூலம் என்பவற்றை இறைவனுக்கும், துகில், தோடு, சாந்து, கிளி, வளை என்பவற்றை இறைவிக்கும் அமைத்துக் கொள்க. வளை பலவாதலால் ‘தொக்கவளை’ என்றார். சிவமும் சத்தியுமாய் உள்ள நிலை இறைவனுக்கு அனாதியானதாகலின், ‘தொன்மைக் கோலம்’ என்றார்.

இதனால், இறைவனது அர்த்த நாரீசுவர வடிவம் கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_69-72&oldid=2367" இலிருந்து மீள்விக்கப்பட்டது