திருப்பாவை

விக்கிநூல்கள் இலிருந்து


	     திருப்பாவை

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.			1

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். 	            2

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.	               3

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.			  4

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். 	          5

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்*
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?*
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 		    6

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து*
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!*
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து*
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்*
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?*
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். 		      7

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு*
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்*
வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்*
கூவுவான் வந்து நின்றோம்* கோதுகலம் உடைய 
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.  	      8

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்*
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?*
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். 		        9

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்*
நாற்றத் துழாய்முடி நாராயணன்* நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்* பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்*
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?*
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 		        10

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து*
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்*
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!*
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்*
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து *நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட *
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி!*நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 		 11

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலை வழியே நின்று பால்சோர*
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்*
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்*
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற*
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்*
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!*
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். 	        12

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்*
பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.		           13

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்*
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்*
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்*
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்*
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். 		      14

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?*
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்*
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்*
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக*
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை*
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்*
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 		    15

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே!* கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே!* மணிக்கதவம் தாள்திறவாய்*
ஆயர் சிறுமியரோமுக்கு* அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்*
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!*நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். 		         16

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்*
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!*
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்*
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த*
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்*
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!*
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.		            17

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்*
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!*
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்*
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்*மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்*
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்*
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.                      18

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்*
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்*
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்*
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்*
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை*
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்*
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்*
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். 		          19

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று*
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்*
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு*
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்*
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்*
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்*
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை*
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். 		         20

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப*
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்*
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்*
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்*
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்*
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே*
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். 	            21

அங்கண்மா ஞாலத்து அரசர்* அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே*
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே*
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?*
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்*
அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல் நோக்குதியேல்*
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். 		    22

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து*
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீபூவைப்பூ வண்ணா!* உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக்* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 	                    23

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி*
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி*
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி*
வென்றுபகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி*
என்றென்றுன் சேவகமே  ஏத்திப் பறைகொள்வான்*
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். 		  24

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்*
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*
தரிக்கிலான் ஆகித் தான்தீங்கு நினைந்த*
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*
நெருப்பென்ன நின்ற நெடுமாலே!* உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி*
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 		        25

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். 		        26

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 			        27

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து* உந்தன்னைப்
பிறவி பெறுந்துதனைப் புண்ணியம் யாம்உடையோம்*
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!* உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை*
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீதாராய் பறையேலோர் எம்பாவாய். 		         28

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து*உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து*நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!*
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்* உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்*
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். 		   29

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை*
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி*
அங்கப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்*
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதைசொன்ன*
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 	                30

                  ஆண்டாள் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பாவை&oldid=14284" இலிருந்து மீள்விக்கப்பட்டது