திருப்பொற் சுண்ணம்/உரை 121-128

விக்கிநூல்கள் இலிருந்து

ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ

டாட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல்

தேவர் கனாவிலுங் கண்டறியாச்

செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச்

சேவகம் ஏந்திய வெல்கொடியான்

சிவபெரு மான்புரம் செற்றகொற்றச்

சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்

செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

நாமும் - நாமும், அன்பர் தம்மோடு வந்து - அன்பரோடு கூடி வந்து, ஆவகை - உய்யும் வகையில், ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி - பணி செய்யும் வகைகளைப் பாடி, விண்மேல் - விண்ணுலகத்திலுள்ள, தேவர் - தேவர்கள், கனாவிலும் கண்டறியா - கனவிலும் கண்டறியாத, செம்மலர்ப் பாதங்கள் - செந்தாமரை மலர் போலும் திருவடிகளை, காட்டும் - எமக்குக் காட்டுகின்ற, செல்வச் சே அகம் ஏந்திய - செல்வமாகிய காளையை அகத்தே கொண்ட, வெல் கொடியான் - வெற்றியையுடைய கொடியையுடையவனும், சிவபெருமான் - சிவபெருமானும், புரம் செற்ற - முப்புரங்களை அழித்த, கொற்றச் சேவகன் - வெற்றியை யுடைய வீரனுமாகிய இறைவனது, நாமங்கள் பாடிப்பாடி - திருநாமங்களைப் பரவி, செம்பொன் செய்சுண்ணம் - சிவந்த பொன் போல ஒளியைத் தருகின்ற வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

காளை செல்வமாகக் கருதப்படுதலின், ‘செல்வச்சே’ என்றார். ‘சே’ என்பது இங்குக் காளையினது வடிவத்தைக் குறித்தது. இவ்வடிவம் கொடியின் அகத்தே எழுதப்பட்டிருத்தலின், ‘சேவகம் ஏந்திய கொடி’ என்றார். திரிபுரங்களை அழித்தமையால், வீரனாயினான் என்பார், ‘புரம் செற்ற கொற்றச் சேவகன்’ என்றார்.

இதனால், இறைவனது வீரம் கூறப்பட்டது.