1-ஆந் திருமொழி - கதிராயிரம்

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:01, 20 ஏப்ரில் 2006 (UTC)

ஸர்வேஸ்வரனைக் காண வேணுமென்று தேடுவார் சிலரும்,
கண்டார் சிலருளர் என்றும் ஆழ்வார் இருவிதமாகக் கூறுதல்

   அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

கதிராயிர மிரவி கலந்தெரித்தா லொத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*
அதிரும் கழற்பொருதோள்  இரணியனாகம் பிளந்து அரியாய்*
உதிரமளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்.        1

நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம்*
ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*
காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க*
வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.      2

கொலை யானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய*
சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்*
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்ட டைப்ப*
அலையார் கடற்கரை வீற்றிருந் தானை அங்குத்தைக் கண்டாருளர். 3

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட*
மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்*
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்*
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.  4

நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும்* முறையால்
சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்*
வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு
தேரேற்றி* சேனை நடுவுபோர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்.    5

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை* மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்*
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பௌவம் ஏறிதுவரை*
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.       6

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்* 
உள்ளவிடம் வினவில் உமக்கு இறைவம்மின் சுவடுரைக்கேன்*
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று*
கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.    7

நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே*
நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்*
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை*         
பாழிலுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்.             8

மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவு மெல்லாம்*
திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்*
எண்ணற் கரியதோ ரேனமாகி  இருநிலம் புக்கிடந்து*
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.       9

கரிய முகில்புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து*
புரவிமுகம் செய்து செந்நெலோங்கி விளைகழனிப் புதுவை*
திருவிற் பொலிமறை வாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே. 	         10

     பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.