1-ஆந் திருமொழி - தன்னேராயிரம்

விக்கிநூல்கள் இலிருந்து

--220.226.15.249 07:33, 17 பெப்ரவரி 2006 (UTC)

--வெ.ராமன் 07:46, 17 பெப்ரவரி 2006 (UTC)

அன்னை கண்ணனுக்கு இன்னமுதன்றி யம்மந்தரேனெனல்[தொகு]

        எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
தன்னேராயிரம் பிள்ளைகளோடு  தளர்நடையிட்டுவருவான்*
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்*
மின்னேர்நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே!*
அன்னே! உன்னை அறிந்து கொண்டேன்  உனக்கு அஞ்சுவன்அம்மம் தரவே.(1)
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப் போனேன்வருமளவுஇப்பால்*
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து*
மின்போல்நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த*
அன்பா!உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.   (2)
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக்  குடத்தயிர்சாய்த்துப்பருகி*
பொய்ம்மாயமருதானஅசுரரைப்  பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்*
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ! உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்*
அம்மா!உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.  (3)
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித் தனிநின்றுகுற்றம்பலபலசெய்தாய்*
பொய்யா!உன்னைப்புறம்பலபேசுவ  புத்தகத்துக்குளகேட்டேன்*
ஐயா!உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.    (4)
முப்போதும்கடைந்தீண்டிய வெண்ணெயினோடு தயிரும்விழுங்கி*
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி*
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல  நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா!உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.    (5)
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச் செந்நெலைக்கற்றாநிறைமண்டித்தின்ன*
விரும்பாக்கன்றொன்றுகொண்டு  விளங்கனிவீழஎறிந்தபிரானே!*
சுரும்பார்மென்குழல்கன்னி  யொருத்திக்குச்சூழ்வலைவைத்துத்திரியும்*
அரம்பா!உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.  (6)
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி*
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி!*
பொருட்டாயமிலேன்எம்பெருமான்!உன்னைப்பெற்றகுற்றமல்லால்* மற்றிங்கு
அரட்டான்உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (7)
வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து*
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்*
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி; கெட்டேன்! வாழ்வில்லை* நந்தன்
காளாய்உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.   (8)
தாய்மோர்விற்கப்போவர் தகப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்*
நீஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களை  நேர்படவேகொண்டுபோதி*
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து  கண்டார்கழறத்திரியும்*
ஆயா!உன்னைஅறிந்துகொண்டேன்  உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.   (9)
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை  மூவேழுசென்றபின்வந்தாய்*
ஒத்தார்க்குஒத்தனபேசுவர் உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா!உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.   (10)
கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி*
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்*
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்*
ஏராரின்னிசைமாலைவல்லார்  இருடீகேசனடியாரே.                   (11)
          பெரியாழ்வார் திருவடிகளே சரணம்