2-வது திருமொழி - அஞ்சணவண்ணனை

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:30, 20 பெப்ரவரி 2006 (UTC)

கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் கரைந்திரங்கி யிசைத்தல்[தொகு]

               கலிநிலைத்துறை 
அஞ்சன வண்ணனை ஆயர்குலக் கொழுந்தினை*
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே*
கஞ்சனைக் காய்ந்த கழலடிநோவக் கன்றின்பின்*
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (1)

பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில்*
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே*
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின்பின்*
எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.(2)

நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்*
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே*
கன்மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின்பின்*
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே. (3)

வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிடப்*
பண்ணிப் பலசெய்து இப்பாடி யெங்கும் திரியாமே*
கண்ணுக் கினியானைக் கானதரிடைக் கன்றின்பின்*
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. (4)

அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்*
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே*
எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்*
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே. (5)

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்*
படிறு பலசெய்து இப்பாடி யெங்கும் திரியாமே*
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின்பின்*
இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (6)

வள்ளி நுடங்கிடை மாதர் வந்துஅலர் தூற்றிட*
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே*
கள்ளி யுணங்குவெங் கானதரிடைக் கன்றின்பின்*
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே. (7)

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்*
என்இளங் கொங்கை அமுதமூட்டி யெடுத்துயான்*
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின்*
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே. (8)

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனைநான்*
உடையும் கடியன ஊன்றுவெம் பரற்களுடை*
கடியவெங் கானிடைக் காலடிநோவக் கன்றின்பின்*
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (9)

என்றும் எனக்கு இனியானை என்மணி வண்ணனை*
கன்றின்பின் போக்கினேனென்று அசோதை கழறிய*
பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட்டன்சொல்*
இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே. (10)

         பெரியாழ்வார் திருவடிகளே சரணம்