3 கலிங்கத்துப் பரணி காடு பாடியது
Wikibooks தளத்திலிருந்து
75 களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம். 1
மரம் செடி கொடிகள்
76 பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. 2
77 உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே. 3
78 வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. 4
பரிதியின் செயல்
79 தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. 5
நிழல் இல்லாமை
80 ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே. 6
நிழலின் செயல்
81 ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. 7
நெருப்பும் புகையும்
82 செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்
பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா. 8
நிலத்தில் நீரின்மை
83 தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. 9
நிலத்தின் வெம்மை
84 இந்நி லத்துளோ ரேக லாவதற் கெளிய தானமோ வரிய வானுளோர்
அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித் தல்ல வோநிலத் தடியி டாததே. 10
இரவியும் இருபொழுதும்
85 இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்பக் கேண்மின்
ஒருபொழுதுந் தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ. 11
பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே
86 காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
ஓடியிளைத் துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ. 12
தேவர் வாழ்க்கை
87 விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
மைம்முகடு முகிற்றிரையிட் டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ. 13
பேயின் மூச்சும் மரத்தின் புகையும்
88 நிலம்புடைபேர்ந் தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். 14
வறண்ட நாக்கும் முதிய பேயும்
89 வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. 15
சூறாவளியின் இயல்பு 90 விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர்ச்
சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். 16
நீறு பூத்த நெருப்பு
91 சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை சீத்தடிப்பச் சிதறியவப் பொடியாற் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். 17
முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்
92 மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும். 18
முத்துக்கள் கொப்புளங்கள்
93 வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேன் முத்தம்
வீழ்ந்தனவத் தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும். 19
காற்றின் தன்மை
94 பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
பாய்கடல்கள் நூக்குமதப் படர்வெங் கானில்
செல்காற்று வாராமல் காக்க வன்றோ
திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ. 20
வெந்தவனமே இந்தவனம்
95 முள்ளாறுங் கல்லாறுந் தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும். 21
மணலின் தன்மை
96 அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே. 22