நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/4-வது திருமொழி - தன்முகத்து

விக்கிநூல்கள் இலிருந்து

அம்புலிப் பருவம்[தொகு]

கலிநிலைத்துறை

தன்முகத்துச்சுட்டி தூக்கத்துங்கத்தவழ்ந்துபோய்

பொன்முகக்கிண்கிணியார்ப்ப புழுதியளைகின்றான்

என்மகன்கோவிந்தன் கூத்தினையிளமாமதி

நின்முகம்கண்ணுள வாகில் நீஇங்கேநோக்கிப்போ.


என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்

தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்

அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்

மஞ்சில்மறையாதே மாமதிமகிழ்ந்தோடிவா.


சுற்றும்ஒளிவட்டம்சூழ்ந்து சோதிபரந்தெங்கும்

எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்

வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற

கைத்தலம்நோவாமே அம்புலிகடிதோடிவா.


சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து

ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்

தக்கதறிதியேல் சந்திரா சலம்செய்யாதே

மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.


அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா

மழலைமுற்றாத இளஞ்சொல்லால்உன்னைக்கூவுகின்றான்

குழகன்சிரீதரன் கூவக்கூவநீ போதியேல்

புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதி.


தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்

கண்டுதுயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்

உண்டமுலைப்பாலாறா கண்டாய்உறங்காவிடில்

விண்தனில்மன்னியமாமதி விரைந்தோடிவா.


பாலகனென்றுபரிபவம்செய்யேல் பண்டொருநாள்

ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்

மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்

மாலைமதியாதே மாமதிமகிழ்ந்தோடிவா.


சிறியவனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்

சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்

சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்

நிறைமதீ நெடுமால்விரைந்து உன்னைக்கூவுகின்றான்.


தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய

பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்

ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐய்யுறவில்லைகாண்

வாழ்வுறுதியேல்மாமதி மகிழ்ந்தோடிவா.


மைத்தடங்கண்ணிய சோதைதன்மகனுக்குஇவை

ஒத்தனசொல்லிஉரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்

வித்தகன்விட்டுச்சித்தன் விரித்ததமிழிவை

எத்தனையும்சொல்லவல்லார்க்கு இடரில்லையே.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.