5-வது திருமொழி - அட்டுக்குவி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:56, 19 மார்ச் 2006 (UTC)

கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக் கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்[தொகு]

   எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும்
      தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப்
 பொட்டத்துற்றி* மாரிப்பகைபுணர்த்த
      பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை*
வட்டத்	தடங்கண் மடமான் கன்றினை
      வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
      கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.  (1)

வழுவொன்று மில்லாச்செய்கை  வானவர்கோன்
     வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழைவந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப
     மதுசூதன் எடுத்து மறித்தமலை*
இழவு தரியாததோர் ஈற்றுப்பிடி
     இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்
    கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (2)

அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரும்
     ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரணேன்று கொள்ளென் றிரப்ப
     இலங்காழிக்கை யெந்தை எடுத்தமலை*
தம்மைச் சரணென்ற தம்பாவையரைப்
     புனமேய்கின்ற மானினம் காண்மினென்று*
கொம்மைப் புயக்குன்றர் சிலைகுனிக்கும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (3)

கடுவாய்ச் சினவெங்கண் களிற்றினுக்குக்
     கவளமெடுத்துக் கொடுப்பானவன்போல்*
அடிவாயுறக் கையிட்டு எழப்பறித்திட்டு
     அமரர்பெருமான் கொண்டு நின்றமலை*
கடல்வாய்ச் சென்றுமேகம் கவிழ்ந்திறங்கிக்
     கதுவாய்ப்பட நீர்முகந்தேறி* எங்கும்
குடவாய்ப்பட நின்று மழைபொழியும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (4)

வானத்திலுல்லீர்! வலியீர் உள்ளீரேல்
    அறையோ! வந்துவாங்குமி னென்பவன்போல்*
ஏனத்துருவாகிய ஈசன்எந்தை
     இடவனெழ வாங்கி யெடுத்தமலை*
கானக் களியானை தன்கொம்பிழந்து
     கதுவாய்மதம் சோரத்தன் கையெடுத்து*
கூனல் பிறைவேண்டி அண்ணாந்துநிற்கும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.    (5)

செப்பாடுடைய திருமாலவன்தன்
    செந்தாமரைக்கை விரலைந்தினையும்*
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள்
     காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை*
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி
     இலங்குமணி முத்துவடம் பிறழ*
குப்பாயமென நின்று காட்சிதரும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (6)

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
     படர்பூமியைத் தாங்கிக்கிடப்பவன்போல்*
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
     தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த
    அனுமன் புகழ்பாடித் தம்குட்டன்களை*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (7)

சலமாமுகில் பல்கணப் போர்க்களத்துச்
     சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவானுறக் கேடகம் கோப்பவன்போல்
     நாராயணன் முன்முகம் காத்தமலை*
இலைவேய் குரம்பைத் தவமாமுனிவர்
     இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய*
கொலைவாய்ச் சினவேங்கைகள் நின்றுறங்கும்
    கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (8)

வன்பேய் முலையுண்டதோர் வாயுடையன்
     வன்தூணென நின்றதோர் வன்பரத்தை*
தன்பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்
     தாமோதரன் தாங்கு தடவரைதான்*
முன்பேவழி காட்ட முசுக்கணங்கள்
    முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை*
கொம்பேற்றி யிருந்து குதிபயிற்றும்
    கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (9)

கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்
     கோலமும் அழிந்தில வாடிற்றில*
வடிவேறு திருவுகிர் நொந்துமில
     மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்*
முடியேறிய மாமுகிற் பல்கணங்கள்
     முன்னெற்றி நரைத்தனபோல* எங்கும்
குடியேறி யிருந்து மழைபொழியும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே.   (10)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
     அரவப்பகை யூர்தி யவனுடைய*
குரவிற் கொடிமுல்லைகள் நின்று றங்கும்
     கோவர்த்தன மென்னும் கொற்றக்குடைமேல் *
திருவிற் பொலிமறை வாணர் புத்தூர்த்
     திகழ்பட்டர் பிரான் சொன்ன மாலைபத்தும்*
பரவுமன நன்குடைப் பத்தருள்ளார்
    பரமான வைகுந்தம் நண்ணுவரே.            (11)

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்