நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/5-வது திருமொழி - உய்யவுலகு

விக்கிநூல்கள் இலிருந்து

செங்கீரைப் பருவம்[தொகு]

எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்


உய்ய வுலகு படைத்துண்ட மணிவயிறா!

ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*

பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*

செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்

செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*

ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (1)


கோளரியின் னுருவங் கொண்டுஅவுண னுடலம்

குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*

மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி

மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*

காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்

கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*

ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (2)


நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்

தம்மனை யானவனே! தரணிதல முழுதும்

தாரகையின் னுலகும் தடவி அதன்புறமும்*

விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும்

விரவிய வேலைதனுள் வெனறு வருமவனே!*

அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (3)


வானவர் தாம்மகிழ வன்சகட முருள

வஞ்ச முலைப்பேயின் நஞ்சமுது உண்டவனே!*

கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்

கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்

என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*

ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (4)


மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்

வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு

ஒத்தஇணை மருதம் உன்னி யவந்தவரை

ஊருகரத் தினொடும் உந்திய வெந்திறலோய்!*

முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்

முன்னமுகத் தணியார் மொய்குழல்கள் அலைய*

அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (5)


காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!

கானக மாமடுவில் காளியனுச்சியிலே*

தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!

துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!*

ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை

அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!*

ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (6)


துப்புடை யாயர்கள் தம்சொல் வழுவாது ஒருகால்

தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய*

நப்பின்னை தந்திறமா நல்விடை யேழவிய

நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்

தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய* என்

அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (7)


உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*

மன்னுகுருங் குடியாய் வெள்ளறையாய்! மதிழ்சூழ்

சோலைமலைக் கரசே கண்ண புரத்தமுதே!*

என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (8)


பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்

பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*

கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக்

கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக*

நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே

நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ*

ஏலுமறைப் பொருளே! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (9)


செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில்

சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்* அரையில்

தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்

பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*

மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும்

மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக*

எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. (10)


அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்

ஆமையு மானவனே!ஆயர்கள் நாயகனே!*

என்அவலம் களைவாய்!ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்!ஆடுக ஆடுகவென்று*

அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு

ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்ததமிழ்*

இன்னிசை மாலைகள் இப்பத்தும்வல்லார் உலகில்

எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே. (11)


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்