5-வது திருமொழி - பின்னைமணாளனை

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:56, 8 பெப்ரவரி 2006 (UTC)

குழல் வாரக் காக்கையை வாவெனல்[தொகு]

 கலித்தாழிசை
பின்னை மணாளனைப்  பேரில் கிடந்தானை*
முன்னை யமரர் முதல்தனி வித்தினை*
என்னையும்  எங்கள்குடி முழுது ஆட்கொண்ட*
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
         மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!      (1)
பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம்*
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்*
காயா மலர்வண்ணன்  கண்ணன் கருங்குழல்*
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
         தூமணிவண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!  (2)
திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த*
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்*
அண்ணல் அமரர் பெருமானை* ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
         கார்முகில்வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்.(3)
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு*
கள்ள வசுரன் வருவானைத் தான்கண்டு*
புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட*
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்!
         பேய்முலையுண்டான் குழல்வாராய் அக்காக்காய்!(4)
கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை*
பற்றி யெறிந்த பரமன் திருமுடி*
உற்றன பேசி நீஓடித் திரியாதே*
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்!
         ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!       (5)
கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை*
அழிப்பான் நினைந்திட்டு அவ்வாழி யதனால்*
விழிக்கு மளவிலே வேரறுத் தானை*
குழற்கு அணியாகக் குழல்வாராய் அக்காக்காய்!
          கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!    (6)
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்*
உண்டற்கு வேண்டி நீஓடித் திரியாதே*
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்*
வண்டொத் திருண்ட குழல்வாராய் அக்காக்காய்!
          மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!      (7)
உந்தி யெழுந்த உருவ மலர்தன்னில்*
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்*
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி*
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்!
          தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!   (8)
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த*
முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்*
பொன்னின் முடியினைப் பூவணை மேல்வைத்து*
பின்னே யிருந்து குழல்வாராய் அக்காக்காய்!
         பேராயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!     (9)
                   தரவு கொச்சகக்கலிப்பா
கண்டார் பழியாமே அக்காக்காய்* கார்வண்ணன்
வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சிசொல்*
விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல்*
கொண்டாடிப் பாடக் குறுகா வினைதானே.             (10)
       பெரியாழ்வார் திருவடிகளே சரணம்