6-வது திருமொழி - மாணிக்கக் கிண்கிணி

விக்கிநூல்கள் இலிருந்து

சப்பாணிப் பருவம்[தொகு]

வெண்டளையால் வந்த கலித்தாழிசை


மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்*

ஆணிப்பொன்னால் செய்த ஆய்பொன் னுடைமணி*

பேணிப் பவளவாய் முத்திலங்க* பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (1)


பொன்னரை நானொடு மாணிக்கக் கிண்கிணி*

தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட*

என்னரைமேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம்*

மன்னரைமேல் கொட்டாய் சப்பாணி மாயவனே! கொட்டாய் சப்பாணி. (2)


பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன*

என்மணி வண்ணன்! இலங்குபொற் றோட்டின்மேல்*

நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன்*

அம்மணிமேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே! சப்பாணி. (3)


தூநிலா முற்றத்தே போந்து விளையாட*

வானிலா அம்புலீ! சந்திரா! வாவென்று*

நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தாம்*

கோநிலவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி. (4)


புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து*

அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே*

சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்*

பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. (5)


தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது*

போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள*

பாரித்த மன்னர்படப் பஞ்சவர்க்கு* அன்று

தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி. (6)


பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை*

இரந்திட்ட கைமேல் எறிதிரை மோத*

கரந்திடடு நின்ற கடலைக் கலங்க*

சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவில் கையனே! சப்பாணி. (7)


குரக்கினத் தாலே குரைகடல் தன்னை*

நெருக்கி அணைகட்டி நீள்நீர் இலங்கை*

அரக்கர் அவிய அடுகணை யாலே*

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே! சப்பாணி. (8)


அளந்திட்ட தூணை அவன்தட்ட* ஆங்கே

வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்*

உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம்*

பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே! சப்பாணி. (9)


அடைந்திட் டமரர்கள் ஆழ்கடல் தன்னை*

மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி*

வடம்சுற்றி வாசுகி வன்கயிறாக*

கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே! சப்பாணி. (10)

தரவு கொச்சகக் கலிப்பா


ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை*

நாட்கமழ் பூமபொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்*

வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்*

வேட்கையினால் சொல்லுவார் வினைபோமே. (11)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்