நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/10ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 07:59, 23 ஜூலை 2006 (UTC)

தில்லைநகர்த் திருசித்திரகூட மால் இராமனாய் தோன்றிய காதை

        எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
 அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி*
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
 விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை*
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை
 என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே                                                  1

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
 வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி*
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
 வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அந்தணர்க ளொருமூவா யிரவர் ஏத்த
 அணிமணியா சனத்திருந்த அம்மான் தானே.                                                2

செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்
 சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி*
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
 வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை*
தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே.                                              3

தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
 தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை*
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்
 பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து*
சித்திரகூ டத்திருந்தான் தன்னை யின்று
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
 இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.                                            4

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
 வண்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
 கரனோடு தூடணன்த னுயிரை வாங்கி*
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் தன்னைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்
 திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.                                                  5

தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்
 தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி*
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
 வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்*
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை
 ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே.                                                    6

குரைகடலை அடலம்பால் மறுக வெய்து
 குலைகட்டி மறுகரையை யதனா லேறி*
எரிநெடுவே லரக்கரொடும் இலங்கை வேந்தன்
 இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து*
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அரசமர்ந்தான் அடிசூடும் அரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே.                                                      7

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
 அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்*
தன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
 உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்*
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
 பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே.                                              8

செறிதவச்சம் புகன்தன்னைச் சென்று கொன்று
 செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோன் ஈந்த*
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் தன்னைத்
 தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட*
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
 உடையோம்மற் றுறுதுயரம் அடையோம் இன்றே.                                          9

            சாற்றுப்பாட்டுக்கள்

அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
 அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று*இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
 விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி*
சென்றினிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்
 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
என்றும்நின்றான் அவனிவனென் றேத்தி நாளும்
 இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர்! நீரே.                                        10

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
 திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை*
எல்லையில்சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
 அதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா*
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
 கோழியர்கோன் குடைக்குலசே கரன்சொற் செய்த*
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
 நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.                                                  11

  குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்