4-வது திருமொழி - தழைகளும்

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 10:38, 24 பெப்ரவரி 2006 (UTC)

காலிப் பின்னே வரும் கண்ணனைக்க ண்டு இடைக்கன்னியர் காமுறுதல்[தொகு]

         எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி*
குழல்களும் கீதமு மாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி*
நுழைவனர் நிற்பன ராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண்மறந் தொழிந்தனரே. (1)

வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத்திருவரை விரித்துடுத்து *
பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே*
முல்லைநல் நறுமலர் வேங்கைமலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே*
எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர்நின்று அங்கினவளை இழவேன்மினே. (2)

சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட*
ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்றி ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்*
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகேநின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே. (3)

குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி*
கன்றுகள் மேய்த்துத் தன்தோழ ரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு*
என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி! வந்து காணாய்*
ஒன்றும் நில்லா வளைகழன்று துகில்ஏந்து இளமுலையும் என்வசமல்லவே. (4)

சுற்றிநின்று ஆயர் தழைகளிடச் சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து*
பற்றிநின்று ஆயர்கடைத் தலையே பாடவும் ஆடக்கண்டேன்* அன்றிப்பின்
மற்றொருவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம்மாயற் கல்லால்*
கொற்றவனுக்கு இவளா மென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே. (5)

சிந்துர மிலங்கத்தன் திருநெற்றிமேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும்*
அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ் வருமாயரோடு உடன்வளை கோல்வீச*
அந்தமொன்றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில்*
பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ. (6)

சாலப்பல்நிரைப் பின்னே தழைக்காவின்கீழ் தன்திருமேனி நின்றொளி திகழ*
நீலநல் நறுங்குஞ்சி நேத்திரத்தாலணிந்து  பல்லாயர் குழாம் நடுவே*
கோலச் செந்தாமரைக் கண்மிளிரக் குழலூதி யிசைபாடிக் குனித்து* ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆய்ப்பிள்ளை அழகு கண்டு என்மகளயர்க்கின்றதே. (7)

சிந்துரப் பொடிக் கொண்டு சென்னியப்பித் திருநாம மிட்டங் கோரிலையந் தன்னால்*
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து*
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை எதிர்நின்றங்கின வளைஇழவேலென்ன*
சந்தியில் நின்று கண்டீர் நங்கைதன் துகிலொடு சரிவளை கழல்கின்றதே. (8)

வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மௌவல் மாலை*
சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டுத் தீங்குழல் வாய்மடுத்தூதியூதி*
அலங்காரத்தால் வருமாயப்பிள்ளை  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம்மெலிகின்றதே. (9)

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே*
கண்ணங்காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம்* வண்டமர் பொழில்புதுவையர்கோன்  விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*
பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே. (10)

             பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=4-வது_திருமொழி_-_தழைகளும்&oldid=3274" இலிருந்து மீள்விக்கப்பட்டது