8-வது திருமொழி - நல்லதோர்தாமரை

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:19, 16 ஏப்ரில் 2006 (UTC)

மகளை மாயவன் கொண்டு போக தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்[தொகு]

      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர*
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ* 
இல்லம் வெறியோ டிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்*
மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப் புறம்புக்காள் கொலோ?  1

ஒன்று மறிவொன் றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள்*
கன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு*
நன்றும் கிறிசெய்து போனான் நாராயணன் செய்த தீமை*
என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் கொலாயிடுங் கொலோ?      2

குமரிமணம் செய்து கொண்டு கோலம் செய்துஇல்லத் திருத்தி*
தமரும் பிறரும் அறியத் தாமோதரற் கென்று சாற்றி*
அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழிபட்டு*
துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ?    3

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்*
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்*
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை*
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம்செய்யுங் கொலோ?    4

தம்மாமன் நந்த கோபாலன் தழீஇக் கொண்டு என்மகள் தன்னை*
செம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும் செவ்வாயும்*
கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு*
இம்மகளைப் பெற்ற தாயர் இனித்தரியா ரென்னுங் கொலோ?    5

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளை*
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ?*
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து*
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவாகைப் பற்றுங் கொலோ?      6

அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை*
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ?*
கொண்டுகுடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து*
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ? 7

குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ!*
நடையொன்றும் செய்திலன் நங்காய்! நந்தகோபன்மகன் கண்ணன்*
இடையிரு பாலும் வணங்க இளைத் திளைத்து என்மகள்ஏங்கி*
கடைகயிறே பற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ?       8

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து*
கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ?*
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என்மகளை*
பண்ணறையாப் பணிகொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ?     9

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு*
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்*
தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புதுவைப் பட்டன் சொன்ன*
தூயதமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணனுக் காளரே.     10

        பெரியாழ்வார் திருவடிகளே சரணம்