நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/8ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 09:42, 22 ஜூலை 2006 (UTC)


             கண்ணபுரத்து காகுத்தன் தாலாட்டு

	            தரவு கொச்சகக் கலிப்பா

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!*
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்!* செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!*
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.                   1

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே!*
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்!*
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே!*
எண்டிசையு மாளுடையாய்! இராகவனே! தாலேலோ.                 2

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்!*
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ!*
கங்கையிலும்  தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!*
எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ.                   3

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!* தசரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன் மணவாளா!* வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே!*
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ.                    4

பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி*
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே!*
சீராளும் வரைமார்பா திருக்கண்ண  புரத்தரசே!*
தாராளும் நீண்முடியென் தாசரதீ! தாலேலோ.                        5

சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே!*
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே!*
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!*
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ.                     6

ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே!*
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே!*
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!*
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.                    7

மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே!*
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே!*
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!*
சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ.                        8

தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் !*
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே!*
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே!*
இளையவர்கட் கருளுடையாய்! இராகவனே! தாலேலோ.               9

தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே!*
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே!*
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே!*
ஏவரிவெஞ் சிலைவலவா! இராகவனே! தாலேலோ.                  10

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்*
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை*
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன*
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே.                    11

    குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்