ஈசாப் நீதிக் கதைகள்/ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு ஓநாய் அதிக தாகத்துடனும் பசியாலும் தவித்துக் கொண்டு இருந்தது. அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. அப்போது சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதைக் கண்டது. உடனே அதற்குக் கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து " டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே " என்றது ஆட்டுக்க்குட்டு மிகுந்த பயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் பக்கத்தில் தண்ணீர் குடிக்கிறேன் நீங்களோ மேல் பாகத்தில் குடிக்கிறீர்கள் .நான் இங்கே தண்ணீர் குடிப்பதால் அங்கு தண்ணீர் எப்படி கலங்கும் " என்றது "ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். அதற்காக அவருடைய தோல் உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்" என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது . அதன் உடல் நடுங்க ஆரம்பித்தது. " ஐயா! நான் சொல்வதைக் கேளுங்கள் தயவு செய்து என் பேச்சை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை" என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு " என்ன கர்வம். எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இனி நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் " என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்தது. ஆட்டுக்குட்டி என்ன கத்தியும் விடாமல், அதனைக் கடித்துத் தின்றது ஓநாய். (கதை உணர்த்தும் நீதி : கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள்)