3-வது திருமொழி - மாணிக்கங்கட்டி

விக்கிநூல்கள் இலிருந்து

திருத்தாலாட்டு[தொகு]

கலித்தாழிசை


மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச் சிறுதொட்டில்

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ வையமளந்தானே தாலேலோ


உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ

இடைவிரவிக் கோத்த எழில்தெழ் கினோடு

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய்அழேல் தாலேலோ உலகமளந்தானே தாலேலோ


எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு

சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு

இந்திரன் றானும் எழிலுடைக் கிண்கிணி

தந்துவனாய்நின்றான் தாலேலோ தாமரைக்கண்ணனே தாலேலோ


சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்

அங்கைச் சுரிவளையும் நாணும் அரைத்தொடரும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்

செங்கண்கருமுகிலே தாலேலோ தேவகிசிங்கமே தாலேலோ


எழிலார்திரு மார்வர்க்கு ஏற்கு மிவையென்று

அழகியவைம் படையும் ஆரமும் கொண்டு

வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்

தொழுதுவனாய்நின்றான் தாலேலோ தூமணிவண்ணனே தாலேலோ


ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்

மாதக்க வெனறு வருணன் விடுதந்தான்

சோதிச்சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத்தோளனே தாலேலோ


கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்

வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்

தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்

கோனே அழேல்அழேல் தாலேலோ குடந்தைக்கிடந்தானே தாலேலோ


கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை

உச்சிமணிச் சுட்டில் ஒண்டா நிரைப்பொற்பூ

அச்சுதனுக் கென்று அவனியாள் போத்தந்தாள்

நச்சுமுலையுண்டாய் தாலேலோ நாராயணாஅழேல் தாலேலோ


மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்

செய்யதடங் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும்

வெய்யகலைப் பாகி கொண்டுஉவளாய் நின்றாள்

ஐயாஅழேல்அழேல் தாலேலோ அரங்கத்தணையானே தாலேலோ


தரவு கொச்சக கலிப்பா


வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட

அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய

செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.