அச்சப் பத்து/உரை 5-8

விக்கிநூல்கள் இலிருந்து

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாந்

திருவுரு அன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன

அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பதப்பொருள் :


வேட்கை வந்தால் வெருவரேன் - ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்ச மாட்டேன், வினைக்கடல் கொளினும் அஞ்சேன் - வினையாகிற கடல் என்னைச் சூழ்ந்துகொண்டாலும் அஞ்சமாட்டேன், இருவரால் மாறு காணா - பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம்பிரான் - எம் தலைவனாகிய, தம்பிரான் ஆம் - இறைவனது, திருவுரு அன்றி - திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றோர் தேவர் - மற்றைய தேவர்களை, எத்தேவர் என்ன - என்ன தேவரென்று, அருவராதவரைக் கண்டால் - அருவருப்பும் கொள்ளாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் :

பறறற்றான் பற்றினைப் பற்றும் அடியார்க்கு உலகப் பற்று அறும் ஆதலின், 'வேட்கை வந்தால் வெருவரேன்' என்றார். அவர்களுக்கு வினையாகிய கடலைக் கடத்தற்கு இறைவனாகிய தோணி உதவுமாதலின், 'வினைக்கடல் கொளினும் அஞ்சேன்' என்றார். அவ்வாறு உதவுகின்றவனாகிய சிவபெருமானைத் தவிர மற்றொரு தேவரைக் கண்டால் வெறுப்பு அடையாதவரைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்பார், 'தம்பிரானாந் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், சிவபெருமானையன்றி மற்றத் தேவரை வணங்குவதால் பிறவித்துன்பம் நீங்காது என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து/உரை_5-8&oldid=2391" இலிருந்து மீள்விக்கப்பட்டது