கடவுள் வாழ்த்து

விக்கிநூல்கள் இலிருந்து

« முன் பக்கம்: பொருளடக்கம் | திருக்குறள் » பாயிரவியல் » கடவுள் வாழ்த்து | அடுத்த பக்கம்: வான் சிறப்பு »


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
  • அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

விளக்கம்:

  • அகர முதல எழுத்தெல்லாம் - அகரம் முதலாகிய எழுத்துக்கள் எல்லாமே
  • ஆதிபகவன் முதற்றே உலகு - ஆதிபகவானே முதலானவன்
தனது திருக்குறளின் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கிறார் வள்ளுவர், அதில் கடவுளின் நிலையை அடைந்த ஆதிபகவானை முதலாக வைத்து தனது குறளை எழுத ஆரம்பிக்கிறார். தனது நூலில் சொல்லப் போகும் அகரம் முதலான எழுத்துக்கள் அனைத்திற்கும் ஆதிபகவானே முதன்மையாக இருகிறான் என்று கூறுகிறார்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
  • தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
  • மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
  • விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  • இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
  • மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
  • ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
  • அந்தணர் என்பதற்குப் பொருள் 'சான்றோர்' என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
  • உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
  • வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


« முன் பக்கம் | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: வான் சிறப்பு »

"https://ta.wikibooks.org/w/index.php?title=கடவுள்_வாழ்த்து&oldid=9853" இலிருந்து மீள்விக்கப்பட்டது