திருக்கோத்தும்பி/உரை 29-32

விக்கிநூல்கள் இலிருந்து

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு

நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த

என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்

குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! ஒன்றாய் முளைத்தெழுந்து - ஒரு பொருளாய் முறைத்துத் தோன்றி, எத்தனையோ கவடுவிட்டு - எத்தனையோ கிளைகளாக விரிந்து, என்னை - அடியேனை, நன்றாக வைத்து - நன்மை உண்டாக வைத்து, நாய் சிவிகை ஏற்றுவித்த - நாயைச் சிவிகையில் ஏற்றினாற்போலச் சிறப்புச் செய்த, என் தாதை தாதைக்கும் - என் பாட்டனுக்கும், எம் அனைக்கும் - எம் தாய்க்கும், பெருமான் - தலைவனாகிய, குன்றாத செல்வற்கே - குறைவு படாத செல்வமுடையானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

இறைவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை ஆதலால், ‘ஒன்றாய் முளைத்தெழுந்து’ என்றும், அவன் உலகங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்றலால், ‘எத்தனையோ கவடுவிட்டு’ என்றும் கூறினார். ‘எம் அனை’ என்றது உமையம்மையைக் குறிக்கும் என்பாருமுளர். சென்றடையாத திருவுடையானாதலின் இறைவன், குன்றாத செல்வனாயினான்.

இதனால், இறைவனது முதன்மை கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_29-32&oldid=2357" இலிருந்து மீள்விக்கப்பட்டது