திருப்பொற் சுண்ணம்/உரை 105-112

விக்கிநூல்கள் இலிருந்து

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்

தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்

செங்கனி வாயித ழுந்துடிப்பச்

சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்

கங்கை இரைக்க அராஇரைக்குங்

கற்றைச் சடைமுடி யான்கழற்கே

பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்

பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

சேயிழையீர் - செம்மையாகிய அணிகளையுடைய பெண்களே, சங்கம் அரற்ற - சங்க வளையல் ஒலிக்கவும், சிலம்பு ஒலிப்ப - காற்சிலம்பு ஒலிக்கவும், தாழ்குழல் - நெடிய கூந்தலில், சூழ்தரு - சுற்றிய, மாலை ஆட - பூமாலை அசையவும், வாய் - வாயிலுள்ள, செங்கனி - சிவந்த கொவ்வைக் கனி போலும், இதழும் துடிப்ப - உதடும் துடிக்கவும், சிவலோகம் பாடி - சிவபுரத்தின் பெருமையைப் பாடி, கங்கை இரைக்க - கங்கை வெள்ளம் சத்திக்க, அரா இரைக்கும் - பாம்பு நடுங்கி ஒலிக்கின்ற, கற்றைச் சடை முடியான் - திரட்சியான சடையையடைய இறைவனது, கழற்கு - திருவடிக்கு, பொங்கிய காதலின் - மிகுந்த விருப்பத்தால், கொங்கை பொங்க - தனங்கள் விம்ம, பொற்றிருச்சுண்ணம் - பொன் போலும் அழகிய வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

சிவபுரத்தைப் பாடுவதால் இன்பம் உண்டாகிறது என்பார், ‘வாயிதழும் துடிப்ப’ என்றார். கங்கை ஒலியை இடிமுழக்கம் என்று எண்ணி அஞ்சுவதால் பாம்பு இரைகின்றது என்பார், ‘கங்கை இரைக்க அரா இரைக்கும்’ என்றார்.

இதனால், இறையுணர்வின் இன்பம் கூறப்பட்டது.