திருப்பொற் சுண்ணம்/உரை 137-144

விக்கிநூல்கள் இலிருந்து

அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி

அருக்கன் எயிறு பறித்தல்பாடிக்

கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி

காலனைக் காலால் உதைத்தல்பாடி

இயைந்தன முப்புரம் எய்தல்பாடி

ஏழை அடியோமை ஆண்டுகொண்ட

நயந்தனைப் பாடிநின் றாடியாடி

நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

அயன் தலை கொண்டு - (சிவபெருமான்) பிரமம் தலையைக் கொய்து, செண்டு ஆடல் பாடி - பந்தாடினமையைப் பாடி, அருக்கன் எயிறு - சூரியனது பல்லை, பறித்தல் பாடி - தகர்த்தமையைப் பாடி, கயந்தனைக் கொன்று - யானையைக் கொன்று, உரி போர்த்தல் பாடி - அதன் தோலைப் போர்த்துக்கொண்டமையைப் பாடி, காலனை - இயமனை, காலால் உதைத்தல் பாடி - திருவடியால் உதைத்தமையைப் பாடி, இயைந்தன முப்புரம் - ஒருங்கே உலவிய திரிபுரங்களை, எய்தல் பாடி - அம்பால் எய்து அழித்தமையைப் பாடி, ஏழை அடியோமை - சிற்றறிவும் சிறு தொழிலு முடைய எங்களை, ஆண்டுகொண்ட - ஆட்கொண்ட, நயந்தனைப் பாடி - நன்மையினைப் பாடி, நின்று ஆடி ஆடி - பாடலுக்கேற்ப நின்று தொடர்ந்து ஆடி, நாதற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

அயன் தலை கொண்டு செண்டாடியது : தன்னைப் பிரமம் என்று அகங்கரித்த பிரமனுடைய செருக்கடங்கும் பொருட்டு இறைவன் வைரவ மூர்த்தியை உண்டாக்கினான். அவ்வைரவ மூர்த்தியைக் கண்டு பிரமனுடைய நடுச்சிரம் நகைக்க, வைரவர் அதனைக் கொய்து பிரமனது செருக்கை அடக்கினார்.

இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது.