வாழ்க்கை வரலாறுகள்/ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி

விக்கிநூல்கள் இலிருந்து

திரு "ஆரண்ய நிவாஸ்" ஆர் ராமமூர்த்தி[தொகு]

திரு "ஆரண்ய நிவாஸ்" ஆர் ராமமூர்த்தி திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலயில் திருச்சி லால்குடிக்கு இடையே உள்ள ஆங்கரை என்ற அழகிய கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி நாட்களில் கையெழுத்து பத்திரிகை நடத்தியுள்ளார். தன் பெயரில் ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் கதை, கட்டுரை,கவிதை ஆகியவற்றை எழுதி வருகிறார். அவ்வப்போது முக நூலிலும் எழுதுவதுண்டு. சில குறிப்பிட்ட பத்திரிகைகளில் (கல்கி,தினமணி கதிர்) 1983 முதல் 2000ம் வருடம் வரை 'தரன்" என்கிற புனை பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் தமிழில் கீர்த்தனைகள் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர்.அவருடைய "ஆரண்ய நிவாஸ்" என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து அவருடைய அனுமதியுடன் பகிரப் பட்ட கதை "அபர காரியம்"

அபர காரியம்…[தொகு]

“ராம நாதன் போய்ட்டானா?”
”என்னது, ராமனாதன் போய்ட்டானா?”
“நம்ம ராமனாதனா?”
மகாதேவ கனபாடிகள் அந்த எண்பத்தைந்து வயதிலும் முடியாமல், தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்.
“மகாதேவ மாமா, நம்ம ராமனாதனா?”
“என்ன ஆச்சு?”
“ராமனாதன் ஒரு கிரஹப்ரவேசத்துக்குப் போய்ண்டிருந்தானாம்..கொஞ்சம் லேட்டா ஆனதினால, வண்டிய கொஞ்சம் வேகமாய் விரட்ட, எதிர்த்தாற் போல ஒரு லாரிக் காரன் அடிச்சு, ராமனாதன் ஸ்பாட்லேயே அவுட்!”
“என்ன அவசரம்?”
“ஒரே நேரத்தில இரண்டு இடத்தில வைதீகத்துக்கு ஒத்துண்டு இருக்கான் போல இருக்கு..அந்த கிரஹப்ரவேசத்துல கொஞ்சம் லேட்டா ஆய்டுத்துங்கிறதால,மோட்டார் சைக்கிளை கொஞ்சம் வேகமா வரலாம்னு நினைச்சிருக்கான்..”
“அச்சச்சோ..பாவமே!”
“இப்ப எல்லாம் இவாளுக்கும் காசு மேல ஆசை வந்துடுத்து..எல்லாரும் மோட்டார் சைக்கிள் வைச்சிருக்கா..ராமனாதன் இதுல ஒரு படி மேல போய்ட்டான்..கேட்டரிங் ஆளோட லிங்க் வைச்சுண்டு, இவனே ஏற்பாடு பண்ணிடறான்..அதுல கமிஷன் வேற..கேட்டா சம்பாதிக்கும் போது சம்பாதிச்சா தான் உண்டு என்று வேதாந்தம் பேசுவான்.இப்ப பாரு என்ன ஆச்சுன்னு?”
“அடக் கடவுளே!”
எல்லார் பேச்சையும் கேட்டுண்டு மகாதேவ கனபாடிகள் நடந்து கொண்டு இருக்கிறார்.ஆச்சு..இன்னும் அஞ்சு நிமிஷம் தான் அந்த ’கட்டேல போறவன்’ அஹம் வந்துடும்..
’..அவன் தான் கட்டேல போய்ட்டானே..இன்னும் என்னடா மகாதேவா அவனுடன்?’- தன் நினைப்பே தன்னை கூச வைத்ததும், இன்னும் குறுகிக் கொண்டு நடந்தார், மகாதேவ கனபாடிகள்.
“ மாமா, இந்த பையன் ஒரு விதத்தில அனாதை தான்.. நான் தாய் மாமன்..எனக்கு பலத்த சம்சாரம்.. நீங்க தான் இவனை உங்க பையனா எடுத்து வளர்த்து வேதம் சொல்லித் தரணும்..”
திருவிடைமருதூரிலிருந்து கச்சலாய் ஒரு பிராமணன் வந்து சொன்னது நேற்று சொன்னது போல இருக்கிறது..
பையன் படு சூட்டிகை! கற்பூர புத்தி!!
தர்க்கம்..வ்யாகர்ணம்..சூத்ரம் ..என்று மளமளவென்று முன்னேறினான்..கொடுக்கிற தட்சிணை மீது ஆசை வைக்காதேடா ராமானாதா என்று அவர் சொல்ல ஆரம்பிப்பதற்க்குள், ராமனாதன் எங்கோ சென்று விட்டான் ..ப்ரயோகம் அவனுக்கு தண்ணி பட்ட பாடு..யார், யார் எப்படி எப்படி சொன்னால் கேட்பார்கள் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான்.தன்னுடைய அத்தனை சாமர்த்தியத்தையும் அப்படியே தட்சிணையாக மாற்றினான், கெட்டிக் காரன்!”
“ராமனாதா காசாசை வேண்டாம்டா..வைதீகன் பரம லெளகீகனா ஆய்டக் கூடாதடா..”
அவன் அதை கேட்கும் மன நிலையில் இல்லை!
”உங்களுக்கு தேவை இல்ல..எனக்கு அப்படியா? மூணு குழந்தைகள் சாஸ்ட்ராவில இஞ்ஜினீயரிங் படிக்கிறது..எவ்வளவு செலவாகும்?” கொஞ்சம் பணம் வந்ததும் திமிர் துண்டு போல் தோளில் சுவாதீனமாய் வந்து உட்கார்ந்து கொண்டது !
மேலும் இவர் அவர்கள் கொடுத்ததே போதும் என்று வாங்கிக் கொள்வது ஏக எரிச்சல்! போகிற வருகிறவர்கள் எல்லாம் வேறு மகாதேவ மாமா எவ்வளவு கண்ணியமாய் இருக்கிறார்..அவரோட சிஷ்யன் ராமனாதன் இப்படி ஆட்கொல்லி பிசாசா இருக்கிறானே என்று அவன் காது படவே பேச ஆரம்பித்து விட்டார்கள்!
அதோ...ராமனாதன் அஹம் வந்து விட்டது!
இவரை கண்டதும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள் கல்பு, ராமனாதனின் பெண்டாட்டி!
“மாமா உங்க சிஷ்யர் இப்படி பண்ணிட்டு போய்ட்டாரே!”
குழந்தைகள் மூன்றும் அவர் காலை கட்டிக் கொண்டு அழுதன!
ரொம்ப நாளாச்சு அவர் இங்கே வந்து..எப்ப அவன் அப்படி சொன்னானோ அவன் மூஞ்சியில விழிக்கக் கூடாதுங்கிற வைராக்யம்!
“யார் வரேன்னிருக்கா?”
“எல்லாரும் இவர் சொன்ன இடத்துக்கு போய்ட்டா..யாராலயும் வர முடியாது இவருக்கு நீங்க தான் மாமா பண்ணி வைக்கணும்”
கதறி அழுதாள், கல்பு.
” நானா?”
மனசுக்குள் மீண்டும் வந்தான் ராமனாதன் ஒரு வெறிச் சிரிப்பில்!
“.....ஓய்..காசு வாங்காதேன்னு என்னை சொல்லாதீர்..என்னால முடியாது..சம்பாதிக்கும் போது சம்பாதிச்சாத் தான்..உண்டு..வேணா ஒண்ணு பண்றேன்.. உம்மோட காரியத்துக்கு நான் ஃப்ரீயா வந்து பண்ணித் தரேன் ஒரு பைசா கூட தட்சணை வாங்காம! நான் பண்றதா நீர் நினைச்சுண்ட அந்த பாவத்துக்கு அது ப்ராயச்சித்தமா இருக்கட்டும் ஓய்!”