10-வது திருமொழி - ஆற்றிலிருந்து

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 06:34, 16 பெப்ரவரி 2006 (UTC)

ஆயர்மங்கையர் முறையிடுதல்[தொகு]

            கலித்தாழிசை 
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை*
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு*
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு*
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்  வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (1)
 குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ*
 எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த*
 வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு*
 விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.(2)
தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி*
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து*
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு*
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். (3)
தேனுகனாவி செகுத்து* பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்*
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து*
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்  அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.(4)
ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு*
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு*
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது*அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.  (5)
தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்*
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி*
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்*
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்  துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். (6)
மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று*
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை*
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே*
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்  தரணியளந்தானால்இன்றுமுற்றும்.      (7)
தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்*
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்*
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்*
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்  அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.  (8)
வானத்தெழுந்த மழைமுகில்போல்* எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி*
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை*
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
 தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.  (9)
    தரவு கொச்சகக்கலிப்பா
அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு*
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட*
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்*
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே.                       (10)
        பெரியாழ்வார் திருவடிகளே சரணம்