3-வது திருமொழி - உருப்பிணி நங்கை
தோற்றம்
--வெ.ராமன் 08:40, 22 ஏப்ரில் 2006 (UTC)
திருமாலிருஞ்சோலைம மலையின் மாட்சி
கலிநிலைத்துறை
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்தோடிச் சென்ற*
உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை*
பொருப்பிடைக் கொன்றை நின்று முறியாழியும் காசும்கொண்டு*
விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே. 1
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்*
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன்மலை*
நஞ்சுமிழ் நாக மெழுந்தணவி நளிர்மாமதியை*
செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2
மன்னு நரகன் தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து*
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன்மலை*
புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று*
பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3
மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த*
காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை*
கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள்* பண்குறிஞ்சிப்
பாவொலி பாடி நடம்பயில் மாலிருஞ் சோலையதே. 4
பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை*
அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை*
குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை*
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. 5
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம்*
ஆண்டுஅங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல் வைத்த அப்பன்மலை*
பாண்தகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக*
தோண்டல் உடையமலை தொல்லை மாலிருஞ்சோலையதே. 6
கனங்குழையாள் பொருட்டாக் கணைபாரித்து* அரக்கர்தங்கள்
இனம்கழு வேற்றுவித்த எழில்தோள் எம்மிராமன்மலை*
கனம்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம்*
இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7
எரிசிதறும் சரத்தால் இலங்கையினை* தன்னுடைய
வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த*
அரையன் அமரும்மலை அமரரொடு கோனும்சென்று*
திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8
கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில்மண் கொண்டளந்து*
மீட்டுமதுண்டு மிழ்ந்து விளையாடு விமலன்மலை*
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறையென்று*
ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9
ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக*
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலவாயிரமும்*
ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. 10
மாலிருஞ் சோலையென்னும் மலையை யுடைய மலையை*
நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை*
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்*
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே. 11
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்