3-வது திருமொழி - சீலைக்குதம்பை

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 07:53, 23 பெப்ரவரி 2006 (UTC)

கண்ணன் வரவு கண்டு யசோதை மகிழ்தல்[தொகு]

     எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன்றிப்பூ*
கோலப் பணைக்கச்சும் கூறையுடையும்  குளிர்முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்துகாணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!நானோ மற்றாருமில்லை.  (1)

கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா! பாவியேன் வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின்மனம் வலியாள் ஒருபெண் இல்லை என்குட்டனே முத்தம்தா.  (2)

காடுகளூடு போய்க்கன்றுகள் மேய்த்து மறியோடி* கார்க்கோடல்பூச்
சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத்தூளிகாண் உன்னுடம்பு*
பேடை மயிற்சாயல் பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன்*
ஆடிஅமுதுசெய் அப்பனுமுண்டிலன் உன்னோடு உடனேயுண்பான்.      (3)

கடியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே!* நீயுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங்கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட்டச் செங்கமல
அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீஎம்பிரான். (4)

பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போரேறே!*
எஞ்சிற்றாயர் சிங்கமே! சீதைமணாளா! சிறுக்குட்டச் செங்கண்மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல் வைத்துப்போய்*
கற்றாயரோடு நீகன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.     (5)

அஞ்சுடராழி உன்கையகத் தேந்தும் அழகா! நீபொய்கைபுக்கு*
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்திருந்தேன்*
என்செய்ய என்னைவயிறு மறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.(6)

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற்கடல்வண்ணா!* உன்மேல்
கன்றினுருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மை*
சென்றுபிடித்துச் சிறுக்கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும்*
என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமாவார்களே.  (7)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா! கோவலர் இந்திரற்கு*
கட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதலிலேன் உன்தன்னைக் கொண்டு ஒருபோதும் எனக்கரிது*
வாட்ட மிலாப்புகழ் வாசுதேவா! உன்னை அஞ்சுவன் இன்றுதொட்டும்.  (8)

திண்ணார் வெண்சங்குடையாய்! திருநாள் திருவோணமின் றேழுநாள்* முன்
பண்ணோர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம் செய்திங்கேயிரு.(9)

 		தரவு கொச்சகக்கலிப்பா

புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி தன்புத்திரன் கோவிந்தனை*
கற்றினம் மேய்த்துவரக் கண்டுகந்து அவள்கற்பித்த மாற்றமெல்லாம்*
செற்றமிலாதவர் வாழ்தரு தென்புதுவை விட்டுசித்தன்சொல்*
கற்றிவை பாடவல்லார் கடல்வண்ணன் கழலிணை காண்பார்களே.     (10)

          பெரியாழ்வார் திருவடிகளே சரணம்