5-வது திருமொழி - அட்டுக்குவி
தோற்றம்
--வெ.ராமன் 08:56, 19 மார்ச் 2006 (UTC)
கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக் கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்
[தொகு] எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப்
பொட்டத்துற்றி* மாரிப்பகைபுணர்த்த
பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை*
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குறமகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (1)
வழுவொன்று மில்லாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*
மழைவந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப
மதுசூதன் எடுத்து மறித்தமலை*
இழவு தரியாததோர் ஈற்றுப்பிடி
இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்*
குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (2)
அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரும்
ஆனாயரும் ஆநிரையும் அலறி*
எம்மைச் சரணேன்று கொள்ளென் றிரப்ப
இலங்காழிக்கை யெந்தை எடுத்தமலை*
தம்மைச் சரணென்ற தம்பாவையரைப்
புனமேய்கின்ற மானினம் காண்மினென்று*
கொம்மைப் புயக்குன்றர் சிலைகுனிக்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (3)
கடுவாய்ச் சினவெங்கண் களிற்றினுக்குக்
கவளமெடுத்துக் கொடுப்பானவன்போல்*
அடிவாயுறக் கையிட்டு எழப்பறித்திட்டு
அமரர்பெருமான் கொண்டு நின்றமலை*
கடல்வாய்ச் சென்றுமேகம் கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்பட நீர்முகந்தேறி* எங்கும்
குடவாய்ப்பட நின்று மழைபொழியும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (4)
வானத்திலுல்லீர்! வலியீர் உள்ளீரேல்
அறையோ! வந்துவாங்குமி னென்பவன்போல்*
ஏனத்துருவாகிய ஈசன்எந்தை
இடவனெழ வாங்கி யெடுத்தமலை*
கானக் களியானை தன்கொம்பிழந்து
கதுவாய்மதம் சோரத்தன் கையெடுத்து*
கூனல் பிறைவேண்டி அண்ணாந்துநிற்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (5)
செப்பாடுடைய திருமாலவன்தன்
செந்தாமரைக்கை விரலைந்தினையும்*
கப்பாகமடுத்து மணிநெடுந்தோள்
காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை*
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி
இலங்குமணி முத்துவடம் பிறழ*
குப்பாயமென நின்று காட்சிதரும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (6)
படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்
படர்பூமியைத் தாங்கிக்கிடப்பவன்போல்*
தடங்கை விரலைந்தும் மலரவைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்*
அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த
அனுமன் புகழ்பாடித் தம்குட்டன்களை*
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (7)
சலமாமுகில் பல்கணப் போர்க்களத்துச்
சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*
நலிவானுறக் கேடகம் கோப்பவன்போல்
நாராயணன் முன்முகம் காத்தமலை*
இலைவேய் குரம்பைத் தவமாமுனிவர்
இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய*
கொலைவாய்ச் சினவேங்கைகள் நின்றுறங்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (8)
வன்பேய் முலையுண்டதோர் வாயுடையன்
வன்தூணென நின்றதோர் வன்பரத்தை*
தன்பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்
தாமோதரன் தாங்கு தடவரைதான்*
முன்பேவழி காட்ட முசுக்கணங்கள்
முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை*
கொம்பேற்றி யிருந்து குதிபயிற்றும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (9)
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்
கோலமும் அழிந்தில வாடிற்றில*
வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்*
முடியேறிய மாமுகிற் பல்கணங்கள்
முன்னெற்றி நரைத்தனபோல* எங்கும்
குடியேறி யிருந்து மழைபொழியும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடையே. (10)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
அரவப்பகை யூர்தி யவனுடைய*
குரவிற் கொடிமுல்லைகள் நின்று றங்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக்குடைமேல் *
திருவிற் பொலிமறை வாணர் புத்தூர்த்
திகழ்பட்டர் பிரான் சொன்ன மாலைபத்தும்*
பரவுமன நன்குடைப் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே. (11)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்