7-வது திருமொழி - ஐயபுழுதி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 07:30, 14 ஏப்ரில் 2006 (UTC)

மாலின்மேல் மகள் மாலுறுகின்ற கோலம் தாயவள் கூறல்[தொகு]

                கலிநிலைத்துறை
ஐயபுழுதி உடம்பளைந்து இவள்பேச்சு மலந்தலையாய்*
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள்*
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்*
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே.  1

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூடிற்றில*
சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி*
தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி*
மாயன் மாமணிவண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே.   2

பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்*
சங்கு சக்கரம் தண்டுவாள் வில்லுமல்லது இழைக்கலுறால்*
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை*
சங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே.  3

ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்பெண்மகளை யெள்கி*
தோழிமார் பலர்கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியையார்க் குரைக்கேன்?*
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி*
மூழையுப் பறியாத தென்னும் மூதுரையு மிலளே.   4

நாடும் ஊரும் அறியவேபோய் நல்ல துழாயலங்கள்*
சூடி நாரணன் போமிடமெல்லாம் சோதித்துழி தருகின்றாள்*
கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளை*
பாடு காவலிடுமினென்றென்று  பார்தடுமாறினதே.   5

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்பாடகமும் சிலம்பும்*
இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்*
பொட்டப் போய்ப்புறப்பட்டு நின்று இவள் பூவைப் பூவண்ணா வென்னும்*
வட்டவார் குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.  6

பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள்*
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல்கழிந்தான் மூழையாய்*
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுகவாய் மொழியாள்*
வாசவார்குழல் மங்கைமீர்! இவள் மாலுறுகின்றாளே.  7

காறை பூணும் கண்ணாடி காணும்  தன்கையில் வளைகுலுக்கும்*
கூறை யுடுக்கும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்தேவன் திறம்பிதற்றும்*
மாறில் மாமணி வண்ணன்மேல் இவள் மாலுறுகின்றாளே.  8

கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை*
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணியம்? நம்மை வடுப்படுத்தும்*
செய்த்தலை யெழுநாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள*
மைத்தட முகில்வண்ணன் பக்கல் வளரவிடுமின்களே.  9

பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம்மில்லத்துள்ளே*
இருத்து வானெண்ணி நாமிருக்க இவளும் ஒன்றெண்ணுகின்றாள்*
மருத்துவப் பதம்நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன்*
ஒருப்படுத் திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே.  10

ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் நாராயணனுக்கு* இவள்
மாலதாகி மகிழ்ந்தனளென்று தாயுரை செய்ததனை*
கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன*
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லைவருதுயரே.   11

              பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=7-வது_திருமொழி_-_ஐயபுழுதி&oldid=3384" இலிருந்து மீள்விக்கப்பட்டது