1-ஆந் திருமொழி - மெச்சூது

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 11:04, 1 பெப்ரவரி 2006 (UTC)

பூச்சிகாட்டி விளையாடுதல்[தொகு]

         கலித்தாழிசை
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி*
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்*
பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த*
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.         (1)
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்*
பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற* செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.    (2)
காயும்நீர் புக்குக் கடம்பேறி* காளியன்
தீய பணத்தில் சிலம்பாக்கப் பாய்ந்தாடி*
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற*
ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.       (3)
இருட்டில் பிறந்துபோய் ஏழை வல்லாயர்*
மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்*
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட*
அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.     (4)
சேப்பூண்ட சாடுசிதறி* திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத்தாம்பால்*
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க* அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.      (5)
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு*
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த*
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய*
அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.       (6)
தத்துக் கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?*
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்*
கொத்தார் கருங்குழல் கோபாலகோளரி*
அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.       (7)
கொங்கைவன் கூனிசொற் கொண்டு* குவலயத்
துஙகக் கரியும் பரியும் இராச்சியமும்*
எங்கும் பரதற் கருளி வன்கானடை*
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.       (8)
பதக முதலைவாய்ப் பட்ட களிறு*
கதறிக்கை கூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள்ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த*
அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.       (9)
              தரவுகொச்சகக்கலிப்பா
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த*
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த*
சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்*
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே .                                (10)
	பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
"https://ta.wikibooks.org/w/index.php?title=1-ஆந்_திருமொழி_-_மெச்சூது&oldid=11471" இலிருந்து மீள்விக்கப்பட்டது