பிடித்த பத்து/உரை 25-28

விக்கிநூல்கள் இலிருந்து

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்

பற்றுமா றடியனேற் கருளிப்

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து

பூங்கழல் காட்டிய பொருளே

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி

செல்வமே சிவபெரு மானே

ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :

பாசவேர் அறுக்கும் - பற்றுகளின் வேரைக் களைகின்ற, பழம்பொருள் தன்னை - பழமையான பொருளை, பற்றும் ஆறு - பற்றிக்கொள்கின்ற வழியை, அடியனேற்கு அருளி - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, பூசனை உகந்து - எனது வழிபாட்டினை விரும்பி, என் சிந்தையுள் புகுந்து - என் சித்தத்துள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே, தேசு உடை விளக்கே - ஒளியையுடைய விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தி - விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, ஈசனே - இறைவனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?


விளக்கம் :

உலகப் பற்றை நீக்குவதற்கு இறைவனது பற்றைக் கொள்ள வேண்டுமாதலின், அதனை இறைவன் தமக்கு நல்கியருளினான் என்பார், 'பாசவேரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற்கருளி' என்றார். மெய்ப்பற்றினைப் பற்றிக்கொண்ட பின்னர்ச் சித்தத்திலே தௌ¤வு உண்டாயிற்று என்பதை, 'சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே' என்பதால் உணர்த்தினார். தௌ¤வு உண்டாகிய பின்பு விளங்கிய இறைவனது சொரூப நிலையை, 'தேசுடை விளக்கே' என்றும், தடத்த நிலையை, 'செழுஞ்சுடர் மூர்த்தி' என்றும் கூறினார்.

இதனால், இறைவன், பற்றினை நீக்கி ஞானத்தினை நல்குவான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_25-28&oldid=2386" இலிருந்து மீள்விக்கப்பட்டது