பிடித்த பத்து

விக்கிநூல்கள் இலிருந்து

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு

வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே

செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே

எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 4


பிடித்த பத்து/உரை 1-4


விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே

முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து

கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே

இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 8


பிடித்த பத்து/உரை 5-8


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 12


பிடித்த பத்து/உரை 9-12


அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 16


பிடித்த பத்து/உரை 13-15


ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே

செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே

எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 20


பிடித்த பத்து/உரை 17-20


அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்

பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே

திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 24


பிடித்த பத்து/உரை 21-24


பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே

ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 28


பிடித்த பத்து/உரை 25-28


அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்

சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே

பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 32


பிடித்த பத்து/உரை 29-32


பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 36


பிடித்த பத்து/உரை 33-36


புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 40


பிடித்த பத்து/உரை 37-40


பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து&oldid=2348" இலிருந்து மீள்விக்கப்பட்டது