பிடித்த பத்து/உரை 29-32

விக்கிநூல்கள் இலிருந்து

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற

ஆதியே யாதும்ஈ றில்லாச்

சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த

செல்வமே சிவபெரு மானே

பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்

பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :

அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற - தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற, ஆதியே - முதல்வனே, யாதும் ஈறு இல்லா - சிறிதும் முடிவு இல்லாத, சித்தனே - ஞான வடிவினனே, பத்தர் சிக்கெனப் பிடித்த - அடியார்கள் உறுதியாகப் பற்றின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, பித்தனே - அன்பர்பால் பேரன்பு கொண்டவனே, எல்லா உயிருமாய்த் தழைத்து - எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும், பிழைத்து - நீங்கி, அவை அல்லையாய் நிற்கும் - அவை அல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற, எத்தனே - மாயம் உடையவனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கெழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் :

அறிவே வடிவமாய் உள்ளவனாதலின், முதலும் முடிவும் இன்றி விளங்குகின்றான் என்பார், 'யாதும் ஈறில்லாச் சித்தனே' என்றும், உயிர்களிடத்து விருப்பமுடையவனாதலின், 'பித்தனே' என்றும், உயிரோடு கலந்திருந்தும் அவற்றில் தொடக்குறாது நிற்றலின், 'எத்தனே' என்றும் விளித்தார்.

இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_29-32&oldid=2387" இலிருந்து மீள்விக்கப்பட்டது