2-வது திருமொழி - அலம்பாவெருட்டா

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:22, 22 ஏப்ரில் 2006 (UTC)

    திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு 

              கலிநிலைத்துறை

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை*
குலம்பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன்மலை*
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும்சீர்*
சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.         1

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும்* தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும்மலை*
எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி*
செல்லா நிற்கும்சீர்த் தென்திரு மாலிருஞ்சோலையே.        2

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை*
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை*
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை*
அக்கா னெறியை மாற்றும்  தண்திரு மாலிருஞ் சோலையே.  3

ஆனாயர் கூடி அமைத்த விழவை* அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான்மலை*
வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி*
தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.            4
 
ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில்* கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறையும்மலை*
கருவாரணம் தன்பிடி துறந்தோட* கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் தண்திரு மாலிருஞ் சோலையே.  5

ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை*
சாவத் தகர்த்த சாந்தணிதோள் சதுரன்மலை*
ஆவத் தனமென்று அமரர்களும் நன்முனிவரும்*
சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.          6

மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல்*
முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன்மலை*
கொன்னவில் கூர்வேற்கோன் நெடுமாறன் தென்கூடற்கோன்*
தென்னன் கொண்டாடும்  தென்திரு மாலிருஞ் சோலையே.   7
 
குறுகாத மன்னரைக் கூடுகலக்கி* வெங்கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை*
அறுகால்வரி வண்டுகள் ஆயிரநாமம் சொல்லி*
சிறுகாலைப் பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.        8

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு* பூதங்கள்
அந்திப் பலிகொடுத்து ஆவத்தனம்செய் அப்பன்மலை*
இந்திர கோபங்கள் எம்பெருமான்கனி வாயொப்பான்*
சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே.           9
 
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந்தேவிமார்*
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை*
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென்திரு மாலிருஞ்சோலையே.       10

மருதப் பொழிலணி மாலிருஞ்சோலை மலைதன்னை*
கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம்மான் தன்னை*
விரதம் கொண்டேத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்*
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.     11

       பெரியாழ்வார் திருவடிகளே சரணம்